மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும்!

அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தைக்கு வரும் மரக்கறியை ஏற்றிய சுமை ஊர்திகளில் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மலையகத்தில் அறுவடை ஆரம்பம்

அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளை ஏற்றி வரும் சுமை ஊர்திகள் சந்தைக்கு வருவது தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால், மலையக பிரதேசங்களில் லீக்ஸ், கெரட் ஆகியவற்றின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மரக்கறிகள் உரிய நேரத்தில் கொழும்புக்கு வரவில்லை என்றால், அவை பழுதடைந்து விடக் கூடும்.

ஆயிரம் ரூபாயை தாண்டி கறி மிளாகாயின் விலை

இதனை தவிர போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன.

அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது எனவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தம்புள்ளை மற்றும் கண்டி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளை இராணுவத்தின் உதவியுடன் கொழும்பு எடுத்து வருமாறு வர்த்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.