மருத்துவர் ஒருவரின் கலங்க வைத்த பதிவு!

முச்சக்கரவண்டிக்கு, பெற்றோல் கிடைக்கப் பெறாமையினால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த சிசுவுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டிக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை.

பின்னர், பெற்றோர் குறித்த சிசுவை ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த துயர சம்பவம் குறித்து மருத்துவர் Dr.Shanaka Roshan Pathirana வின் முகநூல்பதிவிலிருந்து,

இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும். பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல் மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து கொண்டுவரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl. அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது.

தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது. அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது.

ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது.

இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே துயரம். அங்க அவயவங்கள் எல்லாம் எந்தக் குறையுமற்று பிறந்திருந்த குழந்தை. இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும்.

பின்னர் இந்த சாபக்கேடான நாட்டில் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் வாழ்வதை விட அந்தக் குழந்தை இறந்ததே நல்லதென்று தோன்றியது என அவர் பதிவிட்டுள்ளார்.