தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லும் ஸ்டாலின்

துபாய் கண்காட்சியில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் வரும் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை பெற முடியும்.

தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் செல்கின்றனர்.

இன்று இரவு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் மு.க.ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார மந்திரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகலில் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்று, தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.