இந்தியாவில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கை வந்த பெண் கைது!

இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கையில்,

”மன்னார் – பேசாளையில் உள்ள வீடொன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக முற்றுகையிடப்பட்டது.

வீட்டை சோதனையிட்ட போது அலுமாரியில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ 240 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வீட்டிலிருந்து 24 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.