கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரயங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நாளொன்றில் மாரடைப்பினால் 450 பேர் வரையிலும், பக்கவாதத்தால் 100 முதல் 150 பேர் வரையிலும் உயிரிழக்கின்றனர்.
கோவிட் தொற்று நாட்டில் கண்டறியப்படுவதற்கு முன்னரே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
எனவே கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகின்றது என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆகையால் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியினை உரிய வகையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.