சிங்கங்களுக்கு உணவுகொடுக்க சென்ற பராமரிப்பாளருக்கு நேர்ந்த கதி!

ஈரானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு 2 சிங்கங்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு உடனிருந்து சிங்கத்துடன் பெண் சிங்கம் ஒன்று தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம்பெற்றது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள 2 சிங்கங்கள் நேற்று திடீரென கூண்டிலிருந்து வெளியேறின. அப்போது பராமரிப்பாளர் சிங்கங்களுக்கு உணவு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கூண்டில் இருந்து வெளியேறிய சிங்கங்களில் பெண் சிங்கம், பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது. சிங்கத்தின் தாக்குதலில் பராமரிப்பாளர் உயிரிழக்கவே இரண்டு சிங்கங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றன.

இதையடுத்து தப்பிச் சென்ற இரண்டு சிங்கங்களை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

மேலும், குறித்த உயிரியல் பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தேடுதல் வேட்டை தொடங்கியது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரண்டு சிங்கங்களையும் பாதுகாப்பு படையினர் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது