கனடா மொன்றியல் ஈழத் தமிழர் உயிரிழப்பு!

கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும், பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இருந்த எஸ்.பி. கனகசபாபதி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவில் முருகன் ஆலயத்தின் படம் பொறிக்கப்பட்ட கனேடிய முத்திரையை வெளியிட்டவர் ஆவார்.

கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945-6-20) திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

எழுத்தாளராக , எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களைக் இவர் கொண்டவர். திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகியன இவர் எழுதிய நூல்கள் ஆகும் .

கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான ‘எழில்’ சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டு வில்விஜயன் என்னும் வடமோடிக் கூத்தைக் கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர்.

ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், ஜேர்மன், பிரஞ்சு ஆகிய மொழிகளில் புலமை உடைய இவர் இந்தியா, ஈரான் உட்படப் பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். அத்துடன் அமெரிக்க National Library of poetry இன் வெளியீடான The Path Not Taken என்ற ஆங்கிலக் கவிதை நூலில் இவரது Singing Dream என்ற கவிதை இடம்பெற்றது.

இவர் கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும், பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இன்னும் பல அமைப்புக்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும் இவர் தனது படைப்பாற்றலுக்காக சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தையும் புலமைப் பரிசில்களையும் பெற்றுக்கொண்டவர். இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.