முல்லைத்தீவு சிறுமியின் மரணத்தில் மேலும் வெளிவரும் உண்மைகள்

முல்லைத்தீவில் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் தாய், தந்தை, மூத்த சகோதரி மற்றும் கணவர் ஆகியோரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையில் சிறுமி இறக்கும் போது சுமார் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி முதல் சிறுமியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,

சிறுமியைத் தேடி பிரதேசவாசிகள், பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் பல நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் பாழடைந்த காணி ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் கடந்த 18 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தையின் மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குடும்பத்தாரின் சம்மதத்துடன் கருவை அழிக்கும் நோக்கில் கருத்தடை மருந்து செலுத்தியதன் பின்னர் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக வதந்தி பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமி தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து செல்லம் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலும் பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் கடந்த தினம் சிறுமியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் கிராமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.