கஞ்சா கடத்திய இருவர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (23) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும் காரைநகர் கடற்பகுதியால் கஞ்சாவினை கடத்தி வரும் சந்தர்ப்பத்திலே கடமையில் இருந்த கடற்படையினர் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 365 கிலோ எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் காரை நகரை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.