சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் குதிரைவாலி கிச்சடி

குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – ஒரு கப்
காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) – 1 1/2 கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, லவங்கம் – 2
பிரியாணி இலை – 2
மராத்தி மொக்கு – ஒன்று
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் ஊறவைத்த அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.
Related Tags :