இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனாதொற்று

நாடு முழுவதும் 50 சதவீத மக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுசுக் மாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆனது. குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும்
தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6918 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 99,155 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2796 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகார் மாநிலத்தில் ஏற்கனவே உயிரிழந்தவர்கள் பட்டியலில் விடுபட்ட 2,426 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கேரளாவில் 263 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3,40,60,774 பேர் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 127,61,83,065 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 சதவீத மக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுசுக் மாண்டியா தெரிவித்துள்ளார். இது பெருமையான ஒரு தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.