18 வயது முடிவடையாத மகளுக்கு நான்கு தடவைகள் திருமண முயற்சி மேற்கொண்ட தாய்!

மகளுக்கு ஒரே வருடத்தில் மூன்று முறை திருமணம் நடத்திய பெண் ஒருவர், நான்காவது முறை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தபோது சிக்கிக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் தமது தாய் மற்றும் சகோதரர் மீது காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். நான்காவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அதில் ஒரே வருடத்திற்குள் தமது மகளுக்கு வெவ்வேறு நபர்களுடன் மூன்று முறை அந்த பெண் திருமணம் செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.

ஆனால் அந்த சிறுமி ஒவ்வொரு முறையும் அவர்களுடன் வாழ விருப்பமில்லாமல் திருமணமான சில நாட்களுக்குள் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து நான்காவது முறையாக அந்த சிறுமிக்கு திருமணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த சிறுமியின் சகோதரர் செய்து வந்தார்.

இதையடுத்து உதவி எண் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொண்ட அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவளது தாய் மீது வழக்குப்பதிவு செய்தனர்.