இங்கிலாந்தில் கொரோனோ பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது.

ஆனால், பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று 47,240 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 21 ஆயிரத்து 497 ஆக உயர்ந்திருக்கிறது.

இதைப்போல கொரோனாவால் மேலும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,44,433 ஆக உயர்த்தி இருக்கிறது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.