இலங்கையில் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஸ இணங்கியுள்ளார்.
சிறிலங்கா பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் ஐபிசி தமிழ் செய்தி பிரிவின் தொலைபேசியூடான செவ்வியின் போது இந்த விடயத்தை தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் எவரும் உள்ளடக்கப்படாமைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
அதேவேளை, செயலணியின் உறுப்பினர்களாக 4 முஸ்லிம்கள் மற்றும் 9 சிங்களவர்களின் பெயர்கள் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆளும் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஸவின் கவனத்திற்கு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர்.
இதன் போதே, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்ள கோட்டாபய இணக்கம் வெளியிட்டுள்ளார். இதேவேளை, கோட்டாபயவின் இந்த செயற்பாடு குறித்து முகப் புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,
ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என தான் சுட்டிக்காட்டியது, இக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காகவே, எனவும் ஞானசாரர் தலைமையில் குழு என்றால், யாரை நியமித்து என்ன பயன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி இன்றைய தினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.