வடமாகாண மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

வட மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 18வயது, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி (Pfizer Vaccine) வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) கூறியுள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படவுள்ளதாக பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ள முடியும்.

இதேவேளை பாடசாலையை விட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.

பைசர் தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு 18, 19 வயதுடைய மாணவர்கள் அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை தடுப்பூசி செலுத்தப்படும் தினம் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு 18, 19 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.