வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவியுடன் திடீர் சந்திப்பு : நடிகர் சசிக்குமார்….

ஒலிம்பிக் வாள் சண்டையில் இந்தியா சார்பாக முதன்முறையாக பங்கேற்று தோல்வியுற்ற தமிழக வீராங்கனை பவானி தேவியை நடிகர் சசிகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

கடந்த ஜூலை 26- ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார். ஏனெனில், இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.

முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி தேவி, இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டிடம் 15 -7 என்ற கணக்கில் தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்தாலும் அவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சசிகுமார் பவானி தேவியை நேரில் சந்தித்து தங்க செயின் அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.