தமிழகத்தின் ஓசூர் பகுதியில் கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி!

தமிழகத்தின் ஓசூர் பகுதியில் கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24). நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன், விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து ஆடு கோடி ‍பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை என்பதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.