இலங்கையை எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் தற்போதைய கொரோனா நிலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் தொற்றுப் பரவலில் இருந்து முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து ஆராயும் உலக சுகாதார அமைப்பின், இலங்கை அலுவலக 5 சிறப்பு வைத்திய நிபுணர்கள் குழு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அதில், இலங்கையில் தற்போதைய கொவிட் இறப்பு மற்றும் கொவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கொவிட் தொற்றால் இறக்க நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் அறிக்கை நேற்று (12 ஆம் திகதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. கொவிட் தொற்றின் மோசமான நிலையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அவையாவன,

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல்
மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்
குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல்
அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல்
பொதுக் கூட்டங்களைத் தடுத்தல்
சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல்
பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள் நோய்த்தொற்றுகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடல்
போன்ற முக்கிய அம்சங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர்கள் குழுவில் வைத்தியர் பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, ராஜீவ் டி சில்வா, லக்குமாரா பெர்னாண்டோ, பத்மா குணரத்ன மற்றும் ஆனந்த விஜேவிக்ரமா ஆகியோர் அடங்குவர்.

அத்துடன் பேராசிரியர்கள் அசித டி சில்வா, ராஜீவ் டி சில்வா, சரோஜ் ஜெயசிங்க, இந்திகா கருணாதிலக, நீலிகா மாளவிகே, காமினி மெண்டிஸ், மாலிக் பீரிஸ் மற்றும் மஞ்சு வீரசிங்க ஆகியோரும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் இணைந்துள்ளனர்.