கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

பைஸர் தடுப்பூசியால் முகத்தசவாதம் எனும் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதன் முறையாக கனடா ஒப்புக்கொண்டுள்ளது.

குறித்த பக்கவிளைவானது மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு Bell’s Palsy என்ற முகத்தசவாதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

முகம் திடீரென்று உணர்ச்சியற்று போதல், தலைவலி, ஒரு கண்ணை மூட இயலாமை மற்றும் உமிழ்நீர் வெளியேற்றம் என அறிகுறிகளாக கூறப்படுகிறது.

கனடாவில் மட்டும் இதுவரை, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 311 பேர்களுக்கு முகத்தசவாதம் ஏற்பட்டுள்ளதுடன், குறுகிய காலத்தில் குணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 206 பேர்களுக்கு பைஸர் தடுப்பூசியாலும், 67 பேர்களுக்கு மாடர்னா தடுப்பூசியாலும், 37 பேர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியாலும் முகத்தசவாதம் என்ற பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அரிதாக முகத்தசவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பைஸர் தடுப்பூசியால் முகத்தசவாதம் என்ற அரிதான பக்கவிளைவு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கனடா முழுமையும் 50 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2,849 பேர்களுக்கு இதய வீக்கம், ஒவ்வாமை, இரத்தம் உறைதல் மற்றும் வலிப்பு உள்ளிட்ட தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசிக்கு பின்னர் முகத்தசவாதம் தொடர்பில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை நாட வேண்டும் என கனேடிய மக்களிடம் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.