மன்னார் மாவட்டத்தில் 2 ம் கட்ட பைஸர் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக இன்றைய தினம்(06) காலை தொடக்கம் ‘பைஸர்’ (Pfizer)கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கடந்த மாதம் ‘பைஸர்’ கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுபட்டவர்களுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணி 2 ஆவது கட்டமாக இன்று(6) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் தாழ்வுபாடு ஆலய வளாகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்றுள்ளது.

அதே போன்று நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம்(6) காலை 2 ஆவது கட்டமாக முதலாவது கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் ஆகியோர் இணைந்து இராணுவம் மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் இன்றையதினம் பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது 30 வயதுக்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பைஸர் தடுப்பூசியை ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.