யாழ்ப்பாணத்தில் செவிலியரின் அசமந்தம்; பெண்ணுக்கு இரு கைகளிலும் ஏற்றப்பட்ட தடுப்பூசி!

யாழில் , பெண் ஒருவருக்கு இரு கைகளிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் கொழும்புத்துறை J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதே பிரிவைச் சேர்ந்த றோய் அருமைராஜன் சத்தியவதி ரதி (வயது-66) என்ற பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையிலும் ஊசி போட்டுள்ளார்.

எனினும் தவறுதலாக இவ்வாறு இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி, அவரை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.