கறுப்பு உப்பின் மருத்துவ நலன்கள்

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

நாம் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம். அதனால், ரத்தக் கொதிப்பு போன்றவை நம்மை அணுகி விடுகின்றன. இனிப்பு என்றால், சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி போன்றவைகளையும், காரம் என்றால், மிளகாய்க்குப் பதிலாக மிளகு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், உப்புக்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்த முடியுமா? உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது.

இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. ஆம். இவ்வகை உப்புக்கு கருப்பு உப்பு என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான். கறுப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் ‘காலா நமக்’ என்று பெயர் கொண்ட கறுப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வகை, சோடியம் குறைவான கறுப்பு உப்பு, நமக்கு என்ன நன்மைகளைத் தருகிறது என்று பார்ப்போம்

தினமும், தக்காளி ஜூஸில், கறுப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும். கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கறுப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும். இந்த உப்பில் முட்டையின் மணம் இருப்பதால், சைவ விரும்பிகள் இந்த உப்பை உட்கொள்வதில்லை. மணம் மட்டுமல்ல, முட்டையின் குணங்கள் அனைத்தும் இந்த உப்பிற்கு உண்டு. ஆரோக்கியத்துக்கு ஏற்ற உப்பு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.