நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.