15 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை! எதிர்காலம் இன்னும் மோசமாகும்

இணையத்தளம் மூலம் 15 வயது சிறுமி விற்பனை செய்யப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து தேசத்தின் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு முழு சமூகத்தின் பொறுப்பாகும். எனவே, சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிரான நிபந்தனையற்ற எதிர்ப்பும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

15 வயது சிறுமியை இணையத்தளம் மூலம் விற்று துஷ்பிரயோகம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும்.

தண்டனைச் சட்டத்தின் 360 ஆவது பிரிவின்படி, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தூண்டும் எவரும் 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆனால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டும்.

துஷ்பிரயோகம் செய்பவர்கள் குழந்தைகளைப் பார்க்கக்கூட முடியாத ஒரு சமூக சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான அனைத்து வழிகளையும் தடுக்க வேண்டும்.

கொவிட்- 19 சிறுவர்களை இணையத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது, இதில் மிக தீவிரமானது சில குழுக்கள் நுட்பமாக சிறுவர்களை பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கின்றன, இது அவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும், மோசமான நிலையை உருவாக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.