உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? : இந்தியா – நியூசிலாந்து…?

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடின. கொரோனா அச்சத்தால் சில தொடர்கள் ரத்தாகின. இதில் பெற்ற புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா மயிரிழையில் இறுதிசுற்று வாய்ப்பை நழுவ விட்டது.

இந்த நிலையில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

தனிமைப்படுத்துதல் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் அதிகமாக இருக்கும். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை வந்து விட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகத் தொடங்கி விடும். அதனால் வேகப்பந்து வீச்சை மிகவும் துல்லியமாக கணித்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் கேப்டன் விராட்கோலி, ‘பொறுமையின் சிகரம்’ புஜாரா ஆகியோரைத் தான் அணி அதிகமாக நம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடியில் மிரட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டின் சூறாவளி பேட்டிங்கையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டது. ஆடுகளம் வறண்டு காணப்பட்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி 1983-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2002-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கையுடன் பகிர்வு, 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இப்படி 5 கோப்பைகளை வென்று இருக்கிறது.

ஆனால் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி. பட்டத்தையும் உச்சி முகர்ந்ததில்லை. அவரது தலைமையில் இந்தியஅணி 2017-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரைஇறுதியிலும் தோல்வி கண்டது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். அது மட்டுமின்றி ஐ.சி.சி. போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை புரட்டியெடுத்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டவும் இப்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது, மனரீதியாக அவர்களின் நம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துள்ளது. முழங்கை காயத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே, கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோர் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்தின் பந்து வீச்சு அசுர பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் நீண்ட காலமாக அபாயகரமான கூட்டணியாக இருக்கிறார்கள். ‘ஸ்விங்’ மற்றும் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் உருவாகி விட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் குடைச்சலாக இருப்பார்கள்.

நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது. 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று போனது. கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கோப்பை ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. ஆக, நியூசிலாந்து வீரர்களும் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள். இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நேரம் இழப்பீடு இன்றி 5 நாட்களும் போட்டி முழுமையாக நடந்து டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் சவுத்தம்டனில் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். அதே சமயம் 5-வது நாளுக்குள் முடிவு கிடைத்து விட்டால், நேரம் கணக்கீடு மற்றும் கூடுதல் நாள் தேவை இருக்காது.

இந்த போட்டியில் கோப்பையை உச்சிமுகரும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¼ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து இங்கு டெஸ்டில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.