இதை வெளியில் சொன்னா கொன்னுடுவேன் என மாணவிக்கு மிரட்டல்! ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து அதே பள்ளியின் இன்னொரு ஆசிரியர் கைது..

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து அதே பள்ளியின் மற்றொரு ஆசிரியரும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பதா சேஷாத்திரி பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லியனியம் பள்ளியில் பகுதிநேர தற்காப்பு பயிற்சியாளராக வேலை பார்த்து வரும் கெபிராஜ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது கராத்தே கலை பயிற்சி பெற வந்த மாணவியிடம் கெபிராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


மேலும், போட்டிகளுக்காக வெளியூர்களுக்கு மாணவியை அழைத்துச் செல்லும் போதும் கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த விவகாரத்தை வெளியே சொல்லக் கூடாது சொன்னா கொன்னுடுவேன் என மாணவிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்நிலைய பொலிசார், பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கெபிராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடிய விடிய கெபிராஜிடம் நடந்த விசாரணையை அடுத்து அவரது நண்பர்கள் இருவரும் சிக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து புகழ்பெற்ற ஒரே பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.