தேசிய பாதுகாப்பு விடயத்தில் கோட்டாபய அரசு தோல்வி!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பிரதான பொறுப்பிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலகியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

உலகிலுள்ள எந்தவொரு கப்பலானாலும் பிரிதொரு நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முன்னர் அது தொடர்பான சகல தகவல்களையும் குறித்த நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமாகும்.

எனவே இது குறித்து எமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறுவது பொய்யாகும். கப்பல் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியாமல் எமது கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு கடற்படையினர் அனுமதி வழங்குவார்களா? மாறாக அனுமதி வழங்கினால் அது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பிரதான பொறுப்பிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலகியுள்ளது என்றார்.