நடிகர் விவேக் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியது?

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நகைச்சுவை நடிகர் மறைந்த விவேக் பலமுறை உரையாடி இருக்கிறார். நேற்றையதினம் நடிகர் விவேக் உயிரிழந்தமை அவரது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு மட்டுமன்றி தமிழ் திரையுலகத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அப்துல்கலாம் தன் குடும்பத்தினரிடம் விவேக் குறித்து கூறியமை தொடர்பில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறியுள்ளார்.

என் சித்தப்பா அப்துல் கலாம் ராமேசுவரத்துக்கு ஒருமுறை வந்திருந்த போது நடிகர் விவேக் பற்றி என்னிடம் பேசினார். விவேக்கை தெரியுமா? என கேட்டார். அதற்கு, தெரியும் அவரது நகைச்சுவை நன்றாக இருக்கும் என அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், விவேக் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. சிறந்த சமூக ஆர்வலர். மரக்கன்றுகளை நட வேண்டும் என ஒரு வரிதான் அவரிடம் அதுவும் ஒருமுறைதான் சொன்னேன்.

அதை ஏற்றுக் கடைப்பிடித்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என என்னிடம் தெரிவித்தார். அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். அவர் நட்டு வைத்த ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு விவேக் வாழ்ந்து வருவது போல் தான் உணர்கிறேன்.

நல்லவர்களை கடவுள் வேகமாக அழைத்து விடுகிறார். நடிகர் விவேக் மரணம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் பாதித்தது போல் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிகமாக பாதித்துள்ளது.

எனது தந்தையின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராமேசுவரத்திற்கு வந்து விவேக் கலந்து கொண்டார். அப்போதும் அவர் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டுச் சென்றார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் அவர் வாழ்ந்து வந்தார் என்பதே உண்மை நசீமா உருக்கத்துடன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.