தமிழகத்தில் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; ஆட்சியைபிடிக்கப்போவது யார்?

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 06ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து என 5 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய, மாநில ஊடக நிறுவனங்களும், சில தனியார் அமைப்புகளும் தேர்தல் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் சமீபத்தில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று திமுக 150+ தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது.

அத்துடன் , இது பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் என தெளிவாக கூறிவிட்டே அந்த கருத்து கணிப்பின் முடிவை வெளியிட்டது அந்த செய்தி நிறுவனம்.

இதேவேளை பிப்ரவரி மாதம் தேர்தல் கூட்டணி முடிவாகவில்லை, எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகின்றது என்று முடிவாக வில்லை, தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை, வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

இப்படி தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் அடிப்படை விஷயங்கள் வெளிப்படையாக, உறுதியாக தெரியாத முன்னர் எதன் அடிப்பபடையில் அவசர அவசரமாக கருத்து கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

இவ்வறான நிலையில் நிஜமாகவே சமூக பொறுப்பு இருந்தால் மேற்கண்ட அனைத்தும் வெளியான பின்பு தான் கருத்து கணிப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று இணைய வாசிகள் பலரும் கூறி வருகிறார்கள்.

தேர்தல் அறிக்கை என்பது வெற்றி , தோல்வியை முடிவு செய்யும் காரணிகளில் முக்கியமான ஒன்று. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், கட்டணமில்லா கேபிள் TV, விலையில்லா வாஷிங்மெஷின், மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை, பொங்கலுக்கு 2500 பரிசுத்தொகை, விலையில்லா சூரிய சக்தி அடுப்பு என அதிமுக தேர்தல் அறிக்கை வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக, தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தாண்டி, தற்போதைய, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஜனரஞ்சகமான தேர்தல் பரப்புரையும் அதிமுகவின் வெற்றியை உறுதிபடுத்தும் காரணியாக உள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

பரப்புரையின் போது கடுமையான சொற்கள் எதையும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தாமல் சாதரணமாக மக்களை ஈர்க்கும் வகையில் பேசுகிறார். எந்த ஒரு செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாக பேசும் அவரது பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆனால், அதேவேளை மறுபக்கம் திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களும் லேசுபட்ட ஆள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சூறாவளி பிரச்சாரத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்கிறார்.

எடப்பாடி பழனிசாமி vs மு.க.ஸ்டாலின் என்ற இருதுருவ அரசியலை நோக்கியே இந்த வருட தேர்தல் களம் இருக்கிறது. யாருக்கும் வெற்றி எளிதல்ல என்பதை இரு கட்சியினரும் மிகத்தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

மேடைக்கு மேடை அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம் என கூறினாலும் இரு கட்சியினரும் ஆற்றும் களப்பணி வியக்கவைக்கிறது. இப்படி கடுமையான சாவல்கள் நிறைந்த இந்த தேர்தலில் அதிமுக முந்துகின்றது என சமீபத்திய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

2016 தேர்தல் முடிவை சரியாக கணித்த நிறுவனம்

இதேவேளை கடந்த, 2016 சட்ட மன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மிகச்சரியான கருத்து கணிப்புகள் வெளியிட்டது இந்த “டெமாக்ரசி நெட்வொர்க்” மற்றும் “உங்கள் குரல்” என்ற தன்னார்வ அமைப்பு.

இந்த கருத்து கணிப்பை நடத்திய நிறுவனம் தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இதனுடைய முக்கிய பலமே, தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை என இந்த மூன்றும் வெளியான பின்பு தான் இந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்துகின்றது என்பது தான். இதுவே கணிப்புகள் துல்லியமாக வருவதற்கு காரணம் என்றும் அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.