இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற்ற அகமதாபாத் Motera மைதானம் இன்று நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் உள்ளது. பகல் – இரவாக நடக்கும் இந்த பிங்க் பந்து 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதலில் பந்து வீச உள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் விபரம்: ரோகித் சர்மா, சுபம் கில், புஜாரா, கோஹ்லி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்‌ஷர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா.

முகமது சிராஜ்-க்கு பதிலாக பும்ராவும், குல்தீப் யாதவிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விபரம்: டொமினிக் சிபிலி, Crawley, ஜானி பாரிஸ்டோ, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் போக்ஸ், ஆர்ச்சர், ஜேக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ரோரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ், ஒல்லி ஸ்டோன், மொயின் அலி ஆகியோருக்கு பதிலாக Crawley, ஜானி பாரிஸ்டோ, ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 2-1 என கைப்பற்றினால் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை 3-1 என வென்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதற்கு மீதமள்ள இரண்டு போட்டியிலும் அந்த அணி வெற்றிப்பெற வேண்டும்.

அதே சமயம், நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், அவுஸ்திரேலியா அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அதுமட்டுமில்லாமல், 1-1 அல்லது 2-2 என இந்தியா-இங்கிலாந்து தொடர் சமனில் முடிந்தாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய தகுதி பெறும்.