உடலுக்கு புரத சத்துக்களை வாரி வழங்கும் ஜவ்வரிசி அடை…

ஜவ்வரிசியில் இருக்கும் அதிகளவிலான புரதம், தசைகளை வலுவூட்ட உதவி செய்கிறது. மேலும், தசைகளில் உள்ள செல்களை புதுப்பித்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தும் குறைகிறது. இனி ஜவ்வரிசியில் அடை செய்வது எப்படி என காண்போம்.

ஜவ்வரிசி அடை செய்ய தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – ஒரு கிண்ணம்,
பொட்டுக்கடலை – அரை கிண்ணம் (மாவாக அரைத்து),
அரிசி மாவு மற்றும் கேரட் துருவல் – தலா அரை கிண்ணம்,

வெங்காயம் – 4,
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

ஜவ்வரிசி அடை செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முதல் நாளில் ஊறவைத்த ஜவ்வரிசியை, நன்றாக நீர் வடித்து பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, அரிசிமாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் ஊற்றாமல் பிசைந்து வைக்க வேண்டும்.


இதனையடுத்து தோசைக்கல் மூலமாக மெல்லிய அடை போல ஊற்றி, பொன்னிறமாக மாறியதும் ஜவ்வரிசி அடையை எடுக்கலாம். சுவையான ஜவ்வரிசி அடை தயார். இதனை தக்காளி சட்னி மற்றும் மிளகாய் வற்றல் கலந்த தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.