விநாயகர் சதுர்த்தியான இன்று இந்த நேரத்தில் பூஜை செய்தால் சக்தி கூடும்!

ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி “விநாயகர் சதுர்த்தி” என்று கொண்டாடப்படுகிறது.

பார்வதி தேவி, களிமண் சிலை செய்து அதற்கு உயிர் கொடுத்த இந்த நாளை, விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இன்று செய்ய வேண்டிய சில முக்கிய விடயங்கள்
  • தலைக்கு குளித்துவிட்டு, புதிய ஆடைகள் அல்லது சுத்தமான ஆடைகள் அணிந்து ஒரு ஸ்டீல் அல்லது சில்வர் தட்டில் அரிசியை நிரப்பி மார்க்கெட் சென்று அங்கு விற்கப்படும் களிமண் பிள்ளையாரை வாங்கவும்.
  • அரிசி நிரப்பிய தட்டில் விநாயகரை வைத்து அங்கிருந்து உங்கள் இல்லத்திற்கு எடுத்து வரவும்.
  • விநாயகர் சிலையை வாங்கும்போது விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவும்.
  • மேலும் விநாயகரின் தந்தம் வலது பக்கம் இருக்கும்படி பார்த்து வாங்கவும். வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வரும் போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அவரை வரவேற்கவும்.
பூஜை அறையில் வைக்க வேண்டியவை

வாங்கி வந்த விநாயகர் சிலையை வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் அல்லது வாழை இலையில் வைக்கவும்.

விநாயகர் சிலையின் இரண்டு பக்கத்திலும் குத்து விளக்கு ஏற்றவும். இரண்டு பக்கத்திலும் வாழை மரத்தை விழாதபடி கட்டி வைக்கவும்.

நிவேத்யம் செய்வதற்கான பழங்களை 3, 5, 7, 9 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பூக்களையும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக 21 பூக்கள், இலைகளை எடுத்துக் கொள்வது நல்லது. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

விரதம்

விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதல் பூஜை முடியும்வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதனை “ஒருபொழுது” என்று கூறுவர். தண்ணீர் கூட பருகாமல் விரதம் இருக்கலாம்.

எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்திருக்கலாம்?

விநாயகர் சிலையை உங்கள் இல்லத்தில் ஒரு நாள் முதல் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிவேத்யம் செய்து இறைவனுக்கு படைக்கலாம்.

விநாயகர் சிலையை எங்கு கரைக்கலாம்?

பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விநாயகர் சிலைக்கு இறுதியாக பூஜை செய்து, வீட்டில் இருந்து எடுத்து சென்று அருகில் இருக்கும் கிணறு, குளம், ஆறு, கடல் போன்ற இடத்தில் சிலையை கரைத்துவிடலாம்.

பூஜைக்கான சிறந்த நேரம்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாள் 22, ஆகஸ்ட், சனிக்கிழமை ஆகும். அன்று விநாயகர் வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 10.29 மணி முதல் மதியம் 01.03 வரை. ஆகவே நீங்கள் விநாயகர் பூஜையை இந்த நேரத்தில் நடத்தலாம். பூஜையின்போது விநாயகர் மந்திரங்களை சொல்வது நன்மையை மேம்படுத்தும்.

நன்மைகள்

விநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்வதனால் ஒருவரின் துயர் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் உங்கள் பிரச்சனைகள் விலகி நன்மை நடக்கும். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவதால் ஒருநபரின் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடலாம் என்றாலும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். ஆகவே இந்த நாளில் விநாயகரை வழிபாடு அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்.