மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 ஆம் கட்டமாக இடம் பெற்ற இலவச நடமாடும் மருத்துவ முகாம்

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் இன்றைய தினம் சனிக்கிழமை (18) இரண்டாம் கட்டமாக இலவச நடமாடும் வைத்திய முகாம் இடம் பெற்றுள்ளது.

வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஜீ.குணசீலன் தலைமையில் குறித்த இலவச நடமாடும் வைத்திய முகாம் நடை பெற்றது.

குறித்த நடமாடும் வைத்திய முகமானது மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலம் பிட்டி, தட்சனாமருதமடு, 2 ஆம் கட்டை சோதி நகர் மற்றும் பூமலந்தான் ஆகிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொண்டதோடு இலவசமாக மருந்துகளைப் பெற்றுக் கொண்டனர்.

குறித்த நடமாடும் வைத்திய முகாமில் கலந்து கொண்ட மக்கள் சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியில் வரிசையாக நின்று மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம் பிட்டி, முள்ளிக்குளம், கீரி சுட்டான் ஆகிய மூன்று கிராமங்களிலும் முதற் கட்டமாக குறித்த நடமாடும் வைத்திய முகாம் இடம் பெற்றது.

குறித்த நடமாடும் வைத்திய முகாமிற்கு பிரித்தானியா PLACK POOL பகுதியைச் சேர்ந்த தமிழ் நண்பர்களும் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.