சொறிஞ்சு சொறிஞ்சு உடம்பெல்லாம் புண்ணாகுதா?

உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் அது நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறி தான் அரிப்பு.

நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும், விழித்திருந்தாலும் அரிப்பு தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் சுகமாகவும், இன்பமாகவும் இருக்கும். பின்னர் அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கிறது.

மீண்டும் அதே ஒவ்வாத பொருளாக உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டுகிறது.

இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றுகிறது.

இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றது.

நாம் சாப்பிடுகின்ற உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.

வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அரிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்கின்றனர். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் குணமாகும்.

அரிப்பு ஏற்படாமல் தடுக்க
  • புலால் உணவு, தயிர், நல்லெண்ணெய், கடுகு வெந்தும் வேகாததுமான உணவு, முதல் நாள் உணவைச் சுட வைத்து அடுத்த நாள் சாப்பிட கூடாது.
  • காய்ந்து உலர்ந்து போன கறிகாய்கள், அதிகம் வெந்து போன உணவு போன்றவை சாப்பிடகூடாது.
  • அதிக கோபம் வருவதை கட்டுப்படுத்த வேண்டும். வருமானம் குறைந்தால் துக்கப்படுவது போன்ற மனசு சார்ந்த விஷயங்களையும் அடக்கி அமைதியுடன் இருத்தல் வேண்டும்.
  • கருந்துளசியை ஒரு கைப்பிடி, 4 மிளகுடன் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அரிப்பு சரியாகும்.
  • நால்பாமராதி தைலம் அல்லது தினசவல்யாதி தைலத்தை உடலில் தடவி, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் அரிப்பு குறையும்.
  • வேப்பம் பட்டை, அரசம்பட்டைகளை தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு, குளித்தால் அரிப்பு தொல்லையிலிருந்து விடுபடலாம்.