ஸ்ரீலங்கா அரசாங்கம் பிறப்பித்துள்ள முக்கிய தடை

கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்ததாவது, “அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் வைத்தியசாலைகளுக்கு இது குறித்து அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பான பரிசோதனைகள் அரச மருத்துவ பரிசோதனை நிலையம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடம், கராப்பிட்டி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளிட்டவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்வரும் சில தினங்களில் வட கொழும்பு வைத்தியசாலையிலும் இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இதேவேளை, சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.