கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டமானது கடந்த நான்காம் தேதியன்று நடைபெற்று முடிந்தது. இந்த தேரோட்டத்தின் போது, மக்கள் கூட்ட நெரிசலை உபயோகம் செய்து சிங்காநல்லூர் பகுதியை சார்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் மூன்றை சவரன் நகை, கவுண்டம்பாளையம் பகுதியை சார்ந்த ரங்கநாயகி (வயது 61) என்பவரிடம் 3 சவரன் நகை, புளியங்குளம் பகுதியை சார்ந்த அம்சவேணி (வயது 65) என்பவரிடம் 1 சவரன் நகை, வாசியாள் வீதி பகுதியை சார்ந்த மகேஸ்வரி (வயது 65) என்பவரிடம் 1 சவரன் நகை என மொத்தமாக 10 பேரிடம் 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்தனர். இந்த சோதனையில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திருந்து வந்துள்ளனர். இதனையடுத்து நகை கொள்ளையில் ஈடுபட்ட திருச்சூர் பகுதியை சார்ந்த பாண்டியராஜன் மனைவி இந்துமதி (வயது 27), இலங்கை கொழும்பு பகுதியை சார்ந்த ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி (வயது 36), இலண்டனை சார்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (வயது 36) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்ளிடம் இருந்து சுமார் 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நேரத்தில் திடுக்கிடும் வாக்குமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலத்தில், இந்துமதி, பராசக்தி மற்றும் செல்வி ஆகிய நாங்கள் மூவரும் சகோதரிகள்.. இந்தியாவில் நடைபெறும் திருவிழாக்கள் தொடர்பான தகவலை இணையத்தின் உதவியுடன் பார்த்துவிட்டு, இலண்டன் மற்றும் கொழும்பு பகுதியில் இருந்து திருவிழா நடைபெறும் இடங்களுக்கு செல்வோம். பின்னர் அங்கேயே அறையெடுத்து தங்கியிருந்து நகைகளை கொள்ளையடித்து அவரவரின் இல்லத்திற்கு மீண்டும் சென்றுவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற திருவிழாவை போல இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு திருவிழாக்களில் கலந்துகொண்டு கைவரிசையை காட்டியுள்ளோம். இதேபோன்று தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியிலும், கோனியம்மன் கோவில் தேரோட்டத்திலும் எங்களின் கைவரிசையை காட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் திருப்பதி, புதுச்சேரி போன்ற பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு கைதாகி வெளிவந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களின் கடவுசீட்டும் தற்போது காவல் துறையினரால் முடக்கம் செய்யப்படவேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.