90 ஆயிரம் பேருக்கு ​கொரோனா! வைரலான காணொளி !

சீனாவில் 90 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீனசெவிலியர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வுஹானில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர், சீனாவில் ஏற்கனவே 90 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியை 2 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இணையத்தில் வைரலாகப் பரவிய அந்த காணொளியில் , முகமூடி அணிந்த வகையில் பெயர் வெளியிட விரும்பாத பெண் செவிலியர் பேசுகையில்,

நான் கொரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் பகுதியில் இருந்து தற்போது பேசுகிறேன். உண்மையைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். இந்த நேரத்தில், வுஹான் பகுதி, ஹுபே மாகாணம் உட்பட சீனா முழுவதும் 90,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். விருந்துகளில் பங்கேற்பது அல்லது விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுகிறேன். வருடத்திற்கு ஒரு முறை, சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். இருப்பினும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருந்தால், அடுத்த ஆண்டு உங்கள் குடும்பத்துடன் மீண்டும் ஆரோக்கியமாக புத்தாண்டு கொண்டாட முடியும்.

கொரோனா குறித்து அரசாங்கம் கூறுவது குறித்து எனக்கு கவலையில்லை. நான் உங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கூற விரும்புவது, எல்லோரும் தயவுசெய்து ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் துணிகளை வுஹானுக்கு நன்கொடையாக வழங்கி எங்களுக்கு உதவுங்கள். தற்போது இங்குள்ள பொருள்கள் போதாது” என்றும் அவர் அந்த காணொளி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.