கேரட் மில்க் ஷேக் செய்வது எப்படி..!!

கேரட் கண்களுக்கு நல்லது என்று அனைவருக்குமே தெரியும். இதுவரை கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ தான் உட்கொண்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்ததுண்டா? உண்மையிலேயே இந்த கேரட் மில்க் ஷேக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேரட் மில்க் ஷேக்கின் செய்முறை வித்தியசமாக இருக்கும். சரி, இப்போது அந்த கேரட் மில்க் ஷேக்கை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

துண்டுகளாக்கப்பட்ட கேரட் – 3/4 கப்

பாதாம் – 16

பால் – 2 கப்

ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் பாதாமை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்பு அதில் கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட்டு, கலவையை நன்கு குளிர வைக்கவும். பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை அடித்து பரிமாறினால், கேரட் மில்க் ஷேக் ரெடி!!!