வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர் சங்க இணைப்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: டக்ளஸ் படத்திற்கு சாணி ஊற்றியதன் எதிரொலி?

வவுனியா பிரஜைகுழுவின் தலைவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளருமான கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெறவுள்ளது.

வுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி. தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டுக்கொடுக்க வந்துவிட்டான். ஜநாவே ஓநாயை உடனடியாக கைதுசெய். உண்மைகள் வெளிவரும் என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அவரது உருவப்படத்திற்கு சாணியினை கரைத்து ஊற்றியதுடன் விளக்குமாறால் அடித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனால் கோபமடைந்த ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் அவரை வழிமறித்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களே தன்னை தாக்கியதாக குறிப்பிட்டு, வவுனியா பொலிஸ் நிலையத்தில் ராஜ்குமார் முறைப்பாடு அளித்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.