தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு தயார் – கருணா அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு வருவார்களாக இருந்தால் நாங்கள் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இடையில், காந்தி பூங்காவில் இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பல்வேறு கேள்விகள் பட்டதாரிகளினால் எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,

பிரதம மந்திரியுடன் பட்டதாரிகள் நியமன விடயம் சம்பந்தமாக பேசியுள்ளேன். ஆகவே இந்த பட்டதாரிகளின் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.

சில பட்டதாரிகளுக்கு தற்போது அவருடைய வயது எல்லைகள் கடந்துள்ளது. உண்மையிலேயே அரசாங்கங்கள் விடுகின்ற பிழைகள் காரணமாக தான் இந்த நிலை உருவாகியுள்ளது.

நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உண்மையை பேசக்கூடியவர். வாக்குறுதிகள் மூலமாக விரைவாக உங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும். பட்டதாரிகளை நாங்கள் வேறுபாடு இன்றிதான் பார்க்க வேண்டும்.

மிலேனியம் சேலஞ்ச் என்ற உடன்படிக்கை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது எங்களுடைய வளங்களை சுரண்டுகின்ற நடவடிக்கையாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்காக இன்று துறை சார்ந்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும கைச்சாத்திட மாட்டோம் என்று கூறி இருக்கின்றார். இது உண்மையிலேயே ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம். அந்த நிலையை நிதி நிறுவனங்கள் இங்கு வருகின்ற போது நிச்சயமாக எங்களுடைய வளங்கள் சுரண்டப்படும்.

கடந்த அரசாங்கத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாங்கம் தெளிவாக வாக்குறுதிகளை தேர்தல் மேடைகளில் கூறியிருக்கின்றது. விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும் என்று.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுக்குநூறாக உடைந்துள்ளது. அவர்கள் அனைத்து கட்சிகளையும் வரும்படி கூறுவார்கள் ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒன்றாக சேர்வதற்கு வருவார்களாக இருந்தால் நாங்கள் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். காரணம் வட மாகாணத்துக்கு ஒரு பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரச்சினை உள்ளது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, உறுப்பினர்களைப் பெறலாம் அல்லது ஒரு தமிழ் முதலமைச்சரை நியமிக்கலாம்.

ஆகவே இதற்காக விட்டுக்கொடுப்புடன் அவர்கள் வருவார்கள் ஆக இருந்தால் நாங்களும் சேர்ந்து செயல்படுவோம். அல்லது மக்கள் உண்மையிலேயே அவர்களை தூக்கி எறிவார்கள் கடந்த காலங்களில் பல தவறுகளை தமித் தேசியக் கூட்டமைப்பு இழைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதகால் எதுவித நியமனங்கள் சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்தில் கூட பேசவில்லை.

தேசியம், தேசியம் என்று கதைத்துக் கொண்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இவ்விடயத்தில் ஆணித்தரமாக கூறுகின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவார்களாக இருந்தால் நாங்கள் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். வேண்டுகோளாக விடுகின்றோம் அனைத்து சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது. ஆகவே சுமந்திரன் செய்பவராக இருந்தால் அதை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.