15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக 13 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக தங்களது 13 வயது மகளை இளைஞருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் கவுண்டனூரை சேர்ந்தவர் மூக்கன் (45). இவரது மனைவி அஞ்சலம் (40). இவர்களது மகன் சரவணகுமார் (23).

இவர்களிடம் குளித்தலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தனர்.

அந்த தம்பதியால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள், அடமானமாக தங்களின் 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, இரு வீட்டாரும் பேசி, கடந்த ஜூன் மாதம் 27-ந் திகதி கோவிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.

கடந்த 5 மாதமாக சரவணகுமார் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த சிறுமி, தனக்கு திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பொலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.