குவைத்தில் திருச்சியை சேர்ந்த மூன்று பெண்களை வீட்டு வேலைக்கு என்று பொய் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டு பாலியல் தொழிலில் ஈடுபட சொல்லி வற்புறுத்தபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
திருவாரூரில் இருக்கும் வெளிநாட்டு ஏஜென்ட் ஒருவரின் மூலமாக குவைத்தில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து திருச்சியை சேர்ந்த 3 பெண்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருப்பினும் அங்கே பெண்களை வெட்டுவேலைக்கு அனுப்பாமல், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளனர்.
அந்த பெண்கள் பாலியல் தொழில் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தால், சித்திரவதைக்கு ஆளாகி இருக்கின்றனர். அதன்பின்னர் நாங்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்று அவர்கள் கூறியதை அடுத்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.
உறவினர்களிடம் அவர்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை என்ற காரணத்தால் ஏஜென்டிடம் சென்று உறவினர்கள் விசாரித்த பொழுது, அவரும் சரியாக பதில் அளிக்காமல் இழுத்தடித்து இருக்கின்றார். அதன் பின்னர் அந்த பெண்கள் இந்த விஷயத்தை இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக திருச்சி ஐஜியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். பின்னர் திருவாரூரைச் சேர்ந்த ஏஜென்டுகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏற்கனவே வீட்டு வேலை என்று கூறி பெண்களை சீரழித்து வரும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆனாலும், இது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் ஏற்படுவதில்லை. இனியாவது பெண்கள் இந்த விஷயத்தை அறிந்து உஷாராக இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.