நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சின் கடமைகளை நேற்று மாலை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சுக்களில் சேவையாற்றுபவர்களில் நிலைப்பாடு வேறுபட்டவையாக இருந்தாலும், அரசியல் நிலைப்பாடுகள் வேறுபட்டவையாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கேற்ப நாம் செயற்பட வேண்டும் எனக்கூறிய பிரதமர், நாட்டில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் , வீடமைப்பு திட்டங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும், கொழும்பில் தற்போது எல்லா இடங்களிலும் எல்லா விடயங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.