மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு பேரை திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிகள்

மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு இளைஞர்ளை இரண்டு சிறுமிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிகள் மூன்று பேர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மறுநாள் பள்ளிக்கு புறப்பட்ட மூன்று பேரும் பெற்றோர்களிடம் சொல்லமால், பள்ளிக்கும் செல்லாமல் சீருடையிலேயே அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்களான கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரும் சீருடையில் சுற்றி திரிந்த மாணவிகளை கவனித்துள்ளனர். சிறுமிகளை பின் தொடர்ந்து பேச்சு கொடுத்த இருவரிடமும் மாணவிகளும் சகஜமாக பேச அவர்களை கடற்கரை பகுதிக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

மறுநாளும் பள்ளிக்கு புறப்படுவதாக கூறிவிட்டு புறப்பட்ட மாணவிகள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடன் தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை, அவற்றை வீட்டிலும் சொல்லவில்லை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என அச்சமடைந்த மாணவிகளிடம், எங்கேயாவது வெளியூர் சென்றுவிடலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, மறுநாள் 3 மாணவிகளில் 2 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர்.

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவர்களை தேடினர்.

பள்ளிக்கு செல்லாமல் அவர்களுடன் சுற்றித் திரிந்த மற்றொரு மாணவியிடம் விசாரிக்க இந்த உண்மை தெரிந்துள்ளது.

இதனிடையே துரைப்பாக்கம் பகுதியில் மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய பொலிசார் கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரது செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர்.

இந்த சூழலில் இரண்டு மாணவிகளையும் கும்பகோணம் அழைத்துச் சென்ற இருவரும் கோவிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டு அங்கிருந்து திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்.

திருப்பூர் விரைந்த பொலிசார் விடுதியொன்றில் தங்கியிருந்த சிறுமிகளை மீட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதில் 25 வயதான கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன், 19 வயதான விஜயக்குமார் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவன்.

மாணவிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில் கனகராஜ் மற்றும், விஜயக்குமாரை பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.