முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா?

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் சரும செல்கள் ஆரோக்கியத்தை இழப்பதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. மேலும் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தால், சரும செல்கள் வறட்சியடைந்து, சருமம் சுருக்கமடைகிறது.

இதனைத் தடுப்பதற்கு எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு கொடுக்கப்படும் பராமரிப்பு போன்று ஏதும் வராது. இங்கு 5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் கொடுக்கப்பட்டுள்ளது.

முட்டை வெள்ளைக்கரு :

முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இச்சத்து சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சரும ஆரோக்கியமடைந்து, பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1

தயாரிக்கும் முறை:

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இந்த கலவையை முகம், கழுத்து, கைகளில் தடவி மென்மையாக விரலால் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள முதுமை சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்