சுவையான மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி ??

வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் சாப்ஸ் செய்யலாம். இந்த சுவையான மட்டன் சாப்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

மட்டன் – 1 கிலோ
தேங்காய்ப்பால் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள்பொடி – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
சீரகத்தூள் – 2 ஸ்பூன்
சோம்புத்தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி, பு+ண்டு விழுது – 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பின் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மட்டனைப் போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊறவைத்துள்ள மட்டனைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின் மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டன் நிறம் மாறும்.

கடைசியாக 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு குக்கரை மூடி 8 விசில் விட்டதும் இறக்கவும். பிறகு குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறவும். மசாலா அனைத்தும் மட்டனுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பரான மட்டன் சாப்ஸ் தயார்..!