பெண்குழந்தை என்பதால், ஆற்றில் புதைத்த தந்தை

இந்தியா, விழுப்புரம் மாவட்டம், வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவரே வரதராசன் இவருக்கு வயது 24. இவரது மனைவியின் பெயர் சௌந்தர்யா. இவர்களுக்கு  ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. சில மாதங்களில் கருவுற்ற சௌந்தர்யாவிடம், “எனக்கு ஆண் வாரிசைத்தான் நீ பெற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தையைப் பெற்றால், உங்கள் இருவரையுமே கொன்றுவிடுவேன்” என்று கணவர் வரதராசன் அடிக்கடி கூறி வந்ததுடன், அதற்காகப் பல பரிகாரங்களையும் செய்து வந்தாராம். இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் திகதி, புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் சௌந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது வைத்தியசாலைக்குச் சென்ற வரதராசன், “எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். ஆண் குழந்தைதான் வேண்டும். இதைக் கொன்றுபோட்டுவிட்டு அல்லது எங்கேயாவது வீசிவிட்டுதான் நீ வீட்டுக்கு வர வேண்டும்” என்று சௌந்தர்யாவை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், இரண்டு நாள்களில் குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா, அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத வரதராசன், “இதைக் கொன்று ஆற்றில் புதைத்தால்தான் எனக்கு நிம்மதி” என்று கூறி வந்திருக்கிறார்.

குழந்தை வளர வளர சரியாகிவிடும் என்று சௌந்தர்யா நினைத்திருந்த நேரத்தில்தான், கடந்த வாரத்தில் ஒருநாள், அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி சென்றிருக்கிறார். அதைப் பார்த்துத் தடுத்த உறவினர்களிடம், “இந்தக் குழந்தை எனக்கு வேணாம். விடுங்க புதைத்துவிட்டு வந்துடுறேன்” என்று சண்டை போட்டிருக்கிறார்.

தொடர்ந்து, உறவினர்கள் அவரைக் கடுமையாகத் திட்டிய நிலையில், பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சௌந்தர்யா. உறவினர்களின் விமர்சனத்துக்கு ஆளான வரதராசன், இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று தனது மாமனார், மாமியாரிடம் கூறிவிட்டு, கடந்த வாரம் சௌந்தர்யாவைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

குழந்தையுடன் அவர் நன்றாகப் பழக ஆரம்பித்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் சௌந்தர்யா. நேற்று இரவு உணவு முடித்தபின், குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, அருகில் தரையில் படுத்துத் தூங்கியிருக்கிறார் சௌந்தர்யா. அதிகாலையில் எழுந்த சௌந்தர்யா, தொட்டிலில் படுத்திருந்த குழந்தையையும் அருகில் படுத்திருந்த கணவரையும் காணாமல் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதிருக்கிறார்.

சிறிது நேரத்தில் அங்கு கூடிய அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும், சந்தேகத்தில் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தென்பெண்னை ஆற்றின் கரையோரம் சென்று தேடியிருக்கின்றனர். அப்போது, ஓரிடத்தில் மட்டும் திட்டாகத் தெரிந்த மணல் பகுதியைத் தோண்டிப் பார்த்தனர். அங்கு, துண்டால் சுற்றப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்த தகவல் தெரிந்ததும், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிய திருக்கோவிலூர் பொலிஸார், வரதராசனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், குழந்தையை வரதராசன் கொன்று புதைத்தாரா அல்லது உயிருடன் புதைத்தாரா என்று, பல கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.