தேர்தலில் இனவாதத்தை விற்க சிலர் முஸ்லிம் தலைவர்கள் முயற்சி!

தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர் என மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியேழுப்பியுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர்களின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவுள்ளது. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும், விசேடமாக முஸ்லிம் மக்களுக்கும் முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன்.

பிரதானமாக கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர் .இந்த இரண்டு பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை நாம் உணர்ந்து தெரிவு செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியில் முஸ்லிம் மக்கள் மீது இனவாத கருத்துக்களும், பல்வேறு தாக்குதல்களும் திட்டமிடப்பட்டு நடந்தேரியது.

இவ்வகையான தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்களுக்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது நாடாளுமன்றத்திற்கு வெளியே என்றாலும் ஒரு வார்த்தை கூட பேசாதவர் தான் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

வட,கிழக்கில் அபிவிருத்தியை செய்தது கடந்த ஆட்சியிலாகும். முஸ்லிம்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்தது மாத்திரமல்லாமல் நான் கொழும்பு மேயராக இருந்த கால கட்டத்தில் கொழும்பு நகரை ஓர் முதல் தர நகராக மாற்ற கோத்தபாய ராஜபக்ஸ எனக்கு உதவினார்.

கோத்தபாய ராஜபக்ஸ இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவார். நாட்டின் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி, பொருளாதாரத்தினை முன்னேற்றுவார்.

ஆகவே இந்த தேர்தலில் யாரை தெரிவு செய்வது என்பது மிக இலேசான விடயமாகும்.

இந்த தேர்தலில் இனவாதத்தை விற்க இன்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.

எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் எம்மை சரியான அரசியல் பாதையில் அழைத்து சென்றனரா? இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா?

இந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸ நிச்சயமாக ஜனாதிபதியாகுவார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.