யாழ். விமான நிலையம் திறப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம்

அரசியல் நலனைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் வியாழக்கிழமை 17ஆம் திகதி திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது, இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ் தகவல் வழங்கையில்

தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும்.

எனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.