ஒரு ரூபாய் மருத்துவமனையில் பிரசவம்

மும்பைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென, பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து, தானே ரயில் நிலையத்தில் உள்ள, ஒரு ரூபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மஹாராஷ்டிர மாநிலம், ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர், சுபாந்தி பத்ரா, 29. நிறைமாத கர்ப்பிணியான இவர், மும்பை அருகில் உள்ள பரேல் பகுதிக்கு, மின்சார ரயிலில் நேற்று சென்றார். அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது பற்றி, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில், தானே நிலையத்தில் நின்றதும், அதிகாரிகள், சுபாந்தியை பிளாட்பாரத்தில் உள்ள, ஒரு ரூபாய் கட்டண மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மத்திய ரயில்வே, முக்கிய ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில், சிறிய மருத்துவமனைகளை திறந்துள்ளது. இந்த மருத்துவமனைகள், தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கே, சிகிச்சைக்கான கட்டணமாக, டாக்டர்களுக்கு, ஒரு ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

ரயில் பயணியிரின் அவசர சிகிச்சைக்காகவே, இந்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. தானே ரயில் நிலையத்தில் உள்ள இந்த மருத்துவமனையில், இதுவரை, 10 பிரசவங்கள் நடந்துள்ளதாக, மருத்துவமனையின் தலைமை அதிகாரி, டாக்டர் ராகுல் குலே தெரிவித்தார்.